Sunday, May 30, 2004

தம்மு

தம்மட்ச்சா கேன்ஸரு வரும். தம்மட்சா நெஞ்சுவலி வந்து அல்பாய்ஸுல பூடுவோம். தம்மடிக்கற்து ஒடம்புக்கு கெடுதலு. தெனம் தெனம் கேட்டுக்கின்னு கீறோம். ஆனா யார்ன்னா அத்த வுட்டு வெளில வராங்களா? கெடியாது. நம்மூர்ல தம்மடிக்காமலே பாதி பேருக்கு கேன்ஸரு வந்துரும். பஸ்ஸு பொக, தண்ணிலாரி பொக, ஆட்டோ பொக, இருக்குற மில்லுங்க அல்லாம் வெளில வுடுற பொக. இப்டி வர்ற அல்லா பொகையும் நம்ம வுள்ள இஸ்துக்கின்னு கீறோம். இதெல்லாம் நாமளா இஸ்டப்பட்டு இஸ்துக்கின்னுகீற பொக இல்ல. ஆனா தம்மடிக்கிறது மட்டும் நாமளா இஸ்டத்தோட இஸ்துக்கின்னு கீறோம்.

ஒரு மன்ஸன் நைட்டு தூங்க போவ சொல்லோ வாயிலே அரிசிய போட்டு வெச்சிக்கின்னு அத்த மறுநாளு காலங்காத்தால வெளில துப்புறான்னு வெய்யி, அத்த எதுனா கோளி துண்ணுச்சுன்னா அந்தக் கோளிக்கு அன்னியோட சமாதி தான். மன்ஸன் ஒடம்பே வெசம் தான். இதுல இருக்குற வெசம் போதாதுன்னு மன்ஸன் தம்மடிக்கிறது, கல்ப் அடிக்கிறதுன்னு புச்சு புச்சா வெசத்த சேத்துக்குறான். கல்ப் அட்சா அத்த அடிக்கிற மன்ஸனுக்கு மட்டும் தான் கெட்டது. ஆனா தம்மடிக்கிறது பெர்ய பேஜார் மேட்டரு. அவனையும் அடிக்கும், சுத்தி இருக்கிறவனையும் அடிக்கும். அத்த மேரி, ஒரு மன்ஸன் ஒரு நாளைக்கு பத்து தம்மு அடிக்கிறான்னு வெய்யி. அந்த பத்து தம்ம மொதோ நாளு ராத்திரி ஒரு டம்பளரு தண்ணில பத்து தம்ம வூறப்போடு. மறுநாளு அந்தத் தண்ணி குட்ச்சா ஆளு பனால். தம்மு அம்புட்டு வெசம்.

தம்மடிக்கிறது ஆம்புளைக்கு அளகு, இளுக்க இளுக்க இன்பம்ன்னு அடிக்க சொல்லோ சொல்லுவாங்கோ. ஆனா அத்த அட்ச்சா நம்ம நெஞ்சுவலி வந்து அல்பாயுசுல போறதுக்கு தியேட்டராண்ட டிக்கெட்டு எடுக்க க்யூவுல அட்ச்சிக்கின்னு நிக்கிற மேரி தான். தம்மட்ச்சா நெஞ்சுவலி, கூடவே வயுத்தெரிச்சலு, கேன்ஸரு அல்லாம் தோஸ்துங்க கணுக்கா வந்து ஒட்டிக்கும். இதுல்லாம் கூட மேட்டரே இல்ல, மேட்டருக்கே ஆப்பு வெக்கிது நம்ம தம்மு. ஆம்புளைக்கு அளகுன்னு சொல்லிக்கிற தம்மு தான் மேட்டருக்கு ஆப்பு வெக்கிது.

இன்னா நயினா, ஓவரா கலீஜ்ஜு பண்றேன்னு கேக்காதிங்கோ. தம்மடிக்கிறது கெடுதலு, அத்த தான் குப்ஸாமி சொல்ல முடியும். நிறுத்திடுபா'ன்னு சொல்ற ரைட்ஸு நம்ம கைல இல்லபா. வோணா ஒண்ணு சொல்லுவேன், அத்த மட்டும் மன்ஸுலே வெச்சிக்கோங்கோ. தம்மடிங்கோ வாணான்னு சொல்லல. அட்த்தவங்களுக்கு டிஸ்டர்பு இல்லாம அடிங்கோ. தம்மடிக்கணும்ன்னு தோணுச்சா, நேரா எங்கனா மன்ஸன் இல்லாத தூரமா போயி அட்ச்சிட்டு வந்துடுங்கோ. முக்கியமா கொய்ந்த புள்ளிங்கோ இர்க்கசொல்லோ அடிக்காதிங்கோ. ஒங்களுக்கு புட்ச்ச கொயிந்திய நீங்களே களுத்த நெரிச்சு கொல்ற மேரி தான் அது.

நாளிக்கி பொய்ல எதிர்ப்பு தெனாமாம். அந்த நல்ல தெனத்துலேந்து பத்து தம்மடிக்கிற ஆளுங்கோ எட்டா கொறச்சிக்கோங்கோ. அத்த மேரியே அடிக்கிற அல்லாரும் கொஞ்சம் கொறச்சுக்கப் பாருங்கோ. மன்ஸன் நென்ச்சா முடியாததாபா.

Thursday, May 27, 2004

வெளம்பரமா பிட்டுப்படமா???

நம்ம டிவி பொட்டில வர்ற வெளம்பரம் எல்லா இன்னாமா கீதுபா. வெளம்பரப் படம் எடுக்கிற அண்ணாத்தேங்க ஷகீலாவ வெச்சி எதுனா பிட்டு படம் எட்த்தாங்கோன்னு சொம்மா பிச்சிக்கின்னு ஓடும்.

இப்போ கொஞ்ச நாளா செவனப்புன்னு ஒரு மேட்டருக்கு வெளம்பரம் வர்தே ஆர்னா பாத்திங்களா. செவனப்பு குடிக்கற்த்துக்கு வர்ற வெளம்பரமில்ல அது, பாக்குறதுக்கு தான். வளக்கம் போல செனப்பு பொம்மய காட்றாங்கோ. அப்பாலிக்கா அந்த பொம்ம செம்மய்யா ஜொள்ளு விடுது. இன்னான்னு பாக்க சொல்லோ ஒரு யக்கா இத்துணூண்டு துணிய போட்டுக்கின்னு பீச்சாண்ட நட்ந்து வர்து. வந்து செவனப்ப எட்த்து குடிக்கிது.

குடிக்க சொல்லோ குடிக்கிற பாட்டில டைரக்டரு காட்ட மாட்டேங்கிறாரு. காமிராவ கீள கொண்டாந்துடுறாரு. பிட்டு படத்துல காட்டுற மேரியே நல்லா க்ளோஸப்புல அல்லாத்தையும் காட்ராங்கோ. குட்ச்சி முட்ச்சிட்டு அந்த யக்கா ஒரு இத்துணூண்டு மேல்துணிய எட்த்து சுத்திக்கின்னு போய்டுது. அப்போவும் டைரக்டரு சொம்மா வுடாம, பின்னாடியே காமிராவ அலைய வுட்டுக்கீறாரு.

அட்த்தது இன்னொரு வெளம்பரம். ஒரு சின்ன பொண்ணும் ஒரு ஆண்ட்டியும் கடைக்கு வராங்கோ. ஒரு வெடலப்பையன் குண்சா பின்னாடி வந்துக்கின்னு கீறான். சின்னப்பொண்ணு ஆண்ட்டிய பாத்து "இன்னிக்கி என்க்கு ஓசி சோறு"ன்னு சொல்லி சிரிக்கிது. பையனும் வந்து வழிஞ்சிக்கின்னே எதோ வழி கேக்குறான். பையன் போவ சொல்லோ சின்னப்பொண்ணு ஆண்ட்டிக்கிட்டே "எனுக்கு ஓசி சோறு கண்டிப்பா உண்டு"ன்னு சொல்லிக்கின்னே எஸ்கேப்பாவுது. பையன் இப்போ அண்ட்டி பின்னாடி வர்ற மேரி காட்றாங்கோ. ஒடனே "டொட்டோடைன்ன்ன்ன்"ன்னு ஒரு சத்தம் குட்த்து விஐபி ப்ரான்னு காட்றாங்கோ.

இவுங்களுக்கு கீற கற்பன தெறத்துக்கு வெளம்பரப்படம் எடுக்காம பிட்டு படம் எட்த்தா மெய்யாலுமே படம் வெள்ளி வெளா தான். வாள்க பாரதம்.

Tuesday, May 25, 2004

படிச்ச அப்பா அம்மாவுக்கு புள்ளியா பொறக்கணும்

எலிக்ஸன் வந்தாலும் வந்துச்சு ஒரே அரசியலா பேச வேண்டியதா பூட்ச்சிபா. இன்னா பண்றது அந்த டைமுக்கு அந்த மேட்டரு. என்னிய மேரியே நம்ம சன் டிவிக்கும் அரசியல் பேசி போரடிச்சிப் பூட்ச்சு போலக்கீது. புச்சா இப்போ பள்ளிக்கொடங்கள கைல எட்த்துக்கின்னாங்கோ. இவுங்க எந்தப் பள்ளிக்கொடம் நல்லாக்கீதுன்னு பட்ச்ச பெரிய மன்ஸங்களாண்ட கேட்டு சொல்லுவாங்களாம், அத்துல போயி துட்டு குட்த்து நம்ம பட்ச்சிக்கணுமாம்.

நேத்திக்கு மதுரைல இர்ந்து ஆரம்பிச்சாங்கோ. காட்டுன இஸ்கூலுல மொதல்ல வந்தது டிவிஎஸு. இஸ்கூல என்னமோ நல்ல இஸ்கூலு தான். ஆனா ஒரு மேட்டரு தான் இடிக்கிது. இந்த இஸ்கூல படிக்கணும்ன்னா புள்ளிங்களோட நைனாவும் ஆத்தாவும் பட்ச்சிருக்கணுமாம். அப்பனும் ஆத்தாளும் படிக்காட்டி புள்ளிங்கோ படிக்காதா? அப்பன் ஆத்தா படிக்காதவங்களா இர்ந்தா புள்ளிங்கோ அப்டியே வீணாப் போற பள்ளிக்கொடத்துல தான் படிக்கணுமா?

இது இன்னா நாயம்னே தெர்லபா. புள்ளிக்கு படிக்கிற தெறம கீதான்னு பாரு, துட்டு வாங்குற பள்ளிக்கொடமா இர்ந்தா துட்டு கெடிக்குமான்னு வோணும்ன்னாலும் பாரு. அத்த வுட்டுப்போட்டு அப்பனும் ஆத்தாளும் பட்ச்சிருந்தா தான் நீயும் படிக்க முடியும்ன்னு சொல்றது இன்னா நாயம்னே தெர்லபா. இஸ்கூலுன்னா இன்னாத்துக்கு கீது. புள்ளிங்கள நல்லா படிக்க வெச்சு, நல்ல மன்ஸங்களா வெளில அனுப்ப தானே. அப்டி இர்க்க சொல்லோ இன்னாத்துக்கு இந்த மேரில்லாம் கேக்கணும்.

குப்பைல கூட குந்துமணி கெடிக்கும், சேத்துல செந்தாமர மொளிக்கும்ன்னு இஸ்கூலுல படிக்க சொல்ல சொல்றாங்கோ. ஆனா அதே இஸ்கூலுல தான் இந்த மேரி மேட்டரும் நடக்குது. "ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே, என்னாமோ நட்க்குது மாய்ம்மாய் இர்க்குது, ஒண்ணுமே பிர்யலே ஒல்கத்துலே"

Saturday, May 22, 2004

மக்கள் நலம்

வண்க்கம் மக்களா, எப்டிக்கீறிங்கோ. ஒரு வாரமா வலப்பூவாண்ட சவாரி போனது பெண்டு களண்டு போச்சுபா. குண்ஸா எதுனா வூத்திக்கின்னா தான் சரி வரும் போல.

சிங்கு தாத்தா நேத்தி சோக்கா போயி பெரதமரு சீட்டுல குந்திக்கின்னாரு. ரொம்ப நல்ல மன்ஸன். நம்ம நாடு நல்லா மேலே வர இவரு எதுனா பண்ணுவாருன்னு நம்புவோம்.

சிங்கு தாத்தா பெரதமரு ஆனது இப்போ மேட்டரே கெடியாது. நம்மூரு தாத்தா "எனுக்கு சீட்டு வாணாம் எனுக்கு சீட்டு வாணாம்"ன்னு சொல்லிக்கின்னு இர்ந்தாரு பாருங்கோ, அத்தான்பா செம்ம கலாசல் காமெடி. நம்மூர்ல கண்ணால சோறு போடுறப்போ செலரு "சோறு வோணுமா"ன்னு கேட்டா "வாணாம் வாணாம்"ன்னு பீச்சாங்கையால தள்ளுவாங்க, ஆனாக்கா சோத்துக்கையி "போடுபா போடுபா"ன்னு சிக்னலு குடுக்கும். அப்டி தான் நம்ம தாத்தா செஞ்சாரு.

டில்லிக்கு ஆதரவு கடுதாசி குட்க்கிறேன்னு கெளம்பி போயி அங்கனயே குந்திக்கின்னு இர்ந்தாரு. இன்னா மேட்டருன்னு பாத்தா தன்னோட பேராண்டிக்கு ஒரு காபினெட்டு மினிஸ்டரு வோணுங்கிறதுக்கு தான் இவ்ளோ ஆட்டமும். கூடவே அட்ட கணக்கா பேராண்டியும், மெயின் அல்லங்கை பாலுவும் ஒட்டிக்கின்னே இர்ந்தாங்கோ. தாத்தாவும் போட்ட பிளான்படி பேராண்டிக்கு காபினெட்டு வாங்கி குட்த்துட்டாரு.

தாத்தாவுக்கு கொஞ்சமும் கொறஞ்சவரு இல்ல நம்ம மரவெட்டி ஐயா. அவரும் டெல்லில போயி குந்திக்கின்னாரு. இவுரு தான் கச்சி ஆரம்பிக்க சொல்ல "நானோ என்னோட வூட்ல இர்ந்தோ ஆரும் எந்தப் பதவியும் ஏத்துக்க மாட்டோம்"ன்னு கொரலு வுட்டவராச்சே, இவுரு இன்னாத்துக்கு இப்டி சுத்திக்கின்னு இர்க்காருன்னு குப்ஸாமியும் ரொம்ப அப்பாவியா நென்ச்சிக்கின்னு இர்ந்தான். மரவெட்டி ஐயா மவன எலிக்ஸன்ல நிறுத்தாமலே காபினெட்டு வாங்கி குட்த்துப்புட்டாரு. அத்தான் ராஜ்யசபா எம்பி சீட்டு கீதுல்ல....

இத்தெல்லாம் பாக்குறப்போ நம்ம பொர்ச்சி தலீவரு ஒரு பயாஸ்கோப்புல பாடுன பாட்டு தான்பா நாபகத்துக்கு வர்து. அத்த அப்போவே நம்ம தாத்தாவ பாத்து தான் பாடி வெச்சாரு, ஆனா தாத்தா தான் இன்னிய வர மாறவே இல்ல.

பாட்டு இன்னான்னு தெர்தா????

"மக்கள்நலம் மக்கள்நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்"

Wednesday, May 19, 2004

வலப்பூ சவாரி

ஓரு வாரத்துக்கு வலப்பூவாண்ட சவாரி வந்துக்கீதுபா. அத்தால சவாரி முடிஞ்சதும் இங்கே வந்து கண்டுக்கீறேன்.

வர்ட்டா......

Friday, May 14, 2004

ஜக்குபாய் ஆட்டைக்கு மறுக்கா வராரு

தலீவரு ஜூட்டு வுட்டுக்கின்னாருக்கு நேத்து நூஸ் பாத்து ஃபீலாகி குப்ஸாமி கொரலு வுட்டுட்டான். இன்னிக்கு மசாலா டைரக்டரு "இன்னாமா கண்ணுங்களா நம்ம பொயப்புக்கே ஒல வெக்கிறிங்கோ. அத்தெல்லாம் அரசியல்ல இன்னா நடந்தாலும் நம்ம தலீவரு படத்த பொங்கலுக்கு வெளில வுடுறாரு"ன்னு பொலம்பிக்கீறாரு.

தலீவா, பாபா மேரி மன்ஸன சுண்டக்கஞ்சி குட்ச்சி சுத்திக்குன்னு இர்க்க வுடாம ஜக்குபாய சொம்மா சுர்ருன்னு ஏறுற பட்டசரக்கு மேரி குடுப்பா. சொம்மா இன்னும் எளம வூஞ்சலாடுதுன்னு நென்ச்சிக்கின்னு ஐஸ்வர்யா, கரீனான்னு கூட்டியாராம ஒன்னோட ரேஞ்சிக்கு ஏத்த மேரி எதுனா ஒரு மீனாவோ ரம்யா கிருஸ்னனையோ புட்ச்சி பட்த்துல போடுபா. இல்லாங்காட்டி சோடிய ஆக்ட்டு கொடுக்கிறங்கோ ஒன்னோட பொண்ணு மேரி தெர்யும். இத்த தலீவரு மட்டும் சொல்லலைபா, அல்லா தாத்தா, சித்தப்பா நடிகருங்களுக்கும் குப்ஸாமி சொல்லிக்கீறேன், அக்காங்.

ஜக்குபாய் ஜகா வாங்கிட்டாருபா

எலிக்ஸன்ல யாருக்கு இன்னா லாபம் கெட்ச்சுதோ இல்லியோ நம்ம சூப்புரு இஸ்டார மெர்ஸல்ல வுட்டுடிச்சி. மன்ஸன் ரொம்பவே ஃபீலாட்டாரு போலக்கீது.

ரசிகனுவோ வெட்டிக்கின்னு வாங்கடான்னா கட்டிக்கின்னு வருவாங்கோன்னு நென்ச்சி மரவெட்டி ஐயாவுக்கு எதிரா கொரலு வுட்டாரு. ரசிகனுங்கோ அல்லாரும் நல்ல மன்ஸங்க தான், தலீவரு கொரலு வுட்டா அத்த சோக்கா செஞ்சு முடிக்கிற ஆளுங்க தான். ஆனா தலீவரு ஒரு நாளிக்கு ஒரு கொரலு வுடுறாரு, தலீவரோட அல்லங்கையி புச்சு புச்சா ஆர்டரு போடுது. ஆனா தலீவரு பப்ளிக்கா எதுனா கொரலு வுட சொல்ல அடக்கி வாசிக்கிறாரு.

இத்தல்லாம் பாத்தாக்கா ரசிகனுங்கோ கொளம்பிபூட மாட்டானுங்களா. அட போ தலீவா நீயி கொரலு வுட்டுப்போட்டு எங்கனா எமயமல, அமெரிக்கான்னு கெளம்பிடுவ, அப்பாலிக்கா அடி ஒத மட்டும் நாங்க வாங்கணும்ன்னு நென்ச்சிட்டாங்க போல. எலிக்ஸன்ல கண்டுக்காம வுட்டுப்போட்டாங்கோ. தாத்தா கூட கூட்டு வச்ச அல்லாருமா கெலிச்சும்புட்டாங்கோ.

இத்த கேட்ட சூப்புரு படா ஃபீலாய்ட்டாரு. இந்த ரசிகனுங்கள நம்பி இனி படம் எறக்குனா இம்மா நாளு சம்பாரிச்சு வச்ச துட்டல்லாம் வுட்டுடுவோம்ன்னு நென்ச்சி நா இனி படம் பண்ணலபான்னு ஜகா வாங்கிக்கின்னாரு. ஜகா வாங்கின கையோட பக்கத்து இஸ்டேட்டு நாயுடுகாருவையும் பாக்கப் போறாராம். அங்க கீற திராச்ச தோட்டத்தைல்லாம் ஆருக்குனா வெல பேசிட்டு அமெரிக்காவுல ஆசிரமம் எதுனா வெச்சி குந்திக்கப் போறாரு போல. போ தலீவா போ, எங்க இர்ந்தாலும் நல்லாருபா.

Tuesday, May 11, 2004

அரோகரா ஆந்திரா

எலிக்ஸன் முடிஞ்சி ஆரு லீடிங்ல வருவாங்கோன்னு கோடு போட்டுக் காட்டுற மேரி ஆந்திரா எலிக்ஸன் ரிசல்டு வந்துடுச்சி. கைச்சின்னம் பார்ட்டிங்கோ அவங்களே எதிர்பாக்காத ரேஞ்சில கெலிச்சிப்புட்டாங்கோ. ஆனாலும் இவ்ளோ பெர்ய தர்ம அடிய நாயுடுவுக்கு தெலுகுப் பார்ட்டிங்கோ குட்த்திருக்க கூடாது.

மேட்டர் முடிஞ்சிப்போச்சு, இனி ஆவ வேண்டிய காரியத்த கவனிக்கணும்.

கைச்சின்னம் பார்ட்டிங்கோ இனியாவது அவங்களுக்குள்ள அட்ச்சிக்காம மக்களுக்கு எதுனா செய்ய நெனைக்கணும். கெட்ச்ச சான்ஸ ஊஸ் பண்ணி எவ்ளோ துட்டு சம்பாரிக்கலாம்ன்னு நெனிக்காம மக்களுக்கு எதுனா செய்யணும்.

நைனா நாயுடு, நீ கவலப்படாத நைனா. இத்த விடப் பெர்ய அடியெல்லாம் தமிள்நாட்டு தாத்தா வாங்கிக்கீறாரு. ஆனா இந்த எலிக்ஸன்ல பாத்தல்ல, ஒரு மாசம் சொம்ம பம்பரம் கணக்க சொலண்டு ஓட்டு சேகரிக்கிறாரு. தமிள்நாட்டுல காமராஜருக்கே ஆப்பு அட்ச்சாங்கோ. ஆந்திராவுல அத்த மேரில்லாம் இல்லாம குப்பம் ஆளுங்கோ ஒன்னிய கெலிக்க வெச்சாங்களே, அத்த நென்ச்சி சந்தோஷப்படுபா.

இந்த தபா பூட்ச்சின்னா இன்னா அட்த்த தபா பாத்துக்கலாம். இனிமேலாவது சினிமாக்காரங்கள நம்பாம ஒன்னிய நம்பு நைனா. ஒரு நல்ல எதிர்கச்சிக்காரன்னா எப்டி இருக்கணும்ன்னு காட்டு, அப்டி செஞ்சின்னா அட்த்த தபா சோக்க கெலிக்கலாம். ரிசல்ட்டு வந்ததும் கைச்சின்னங்காரங்களுக்கு வாள்த்து சொல்லிப்புட்டு சலாம் வெச்சி வெளில வந்தியே, மன்ஸன்பா நீயி. நல்ல எதிர்கச்சியா இர்ந்து அட்த்த தபா ஆட்சிய புடிபா. வர்ட்டா...

Sunday, May 09, 2004

அல்லாரும் மறக்காம ஓட்டு போடுங்கபா

ரெண்டு மாசமா அட்ச்ச வெயில்ல ஐஸ்வாட்டரு குடிக்காம தொண்டத்தண்ணி வத்திப்போவ நம்ம அரசியல்வாதிங்கோ கூவிக்கின்னு இர்ந்த எலிக்ஸன் ஒரு வளியா நாளைக்கு நடக்கப்போவுது. ஒவ்வொரு டிவியும் ஒரு நூஸ் வுடுது. எத்த நம்புறதுன்னு தெர்யாம மக்களும் கொயம்பிக் கெடக்குது. கருத்துக்கணிப்புன்னு சொல்லி நாட்டுல பங்குசந்தைக்கு ஆப்பு வெச்சது தான் மிச்சம். வேற ஒண்ணையும் இந்தக் கருத்துக்கணிப்பு கிளிக்கப் போறது கெடியாது.

ஒவ்வொரு தபா எலிக்ஸன் முடிஞ்சாலும் ஓட்டு பதிவான எண்ணிக்கய பாத்தா அம்பதுலேந்து அறுவது சதவிதம் தான். நைனா நம்ம இன்னா காஷ்மீர்லையும் பீகார்லேயுமா குந்திக்கின்னு கீறோம். ஓட்டு போடுறது நம்மளோட உரிம, அத்த இன்னாத்து வேஷ்ட் பண்ணணும். கரீட்டா ஓட்டக் குத்திட்டா அப்பாலிக்கா எந்த அரசியல்வாதிய வேணா கேள்வி கேக்கலாம். எவன் வந்தா எனக்கென்னன்னு நம்ம வூட்டுல குந்திக்கின்னு சண்டிவி இந்த வாரம் ஒலகத் தொலைக்காச்சில வராத இன்னும் தியேட்டருக்கே வராத பயாஸ்கோப்ப பாத்துக்கின்னு கீறோம்.

இந்தத் தபா எலிக்ஸன் திங்கக்கெளமைல வேற வந்துடுச்சு. ஒட்டுக்கா மூணு நாளு லீவு கெடிக்கும்ன்னு அம்மா வூட்டுக்கு போயிக்கீற பொண்டாட்டிய பாக்க தான் பாதிப்பேரு கெளம்பிடுறாங்கோ. நைனா பொண்டாட்டிய பாக்க வாணாம்ன்னு சொல்லல, ஓட்டப் போடாம வேஷ்ட் பண்ணாத. புச்சா ஒரு பயாஸ்கோப்பு ரிலீஸு ஆனாக்கா மணிக்கணக்கா காத்துக்கின்னு இர்ந்து டிக்கெட்டு வாங்குறோம். டாவு பீச்சாண்ட வெயிட் பண்ணுன்னு சொன்னா அதுக்காக நாலு மணிநேரம் வேணாலும் காலுவலி தெர்யாமா காத்துக்கின்னு கீறோம். ஒரு அரமணி நேரம் வரிசைல நிண்ணு ஒட்டு போட்டா நம்மூட்டு சொத்தா அளிஞ்சுடப்போவுது. அத்தால மறக்காம அல்லாரும் ஓட்டுப் போடுங்கபா.

குப்ஸாமி, வூருக்கெல்லாம் யோக்கியம் சொல்ற, நீ ஓட்டுப் போடலையான்னு கேக்காதிங்கோ, குப்ஸாமிக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயிஸு ஆவல. வர்ட்டா....

Saturday, May 08, 2004

வருது வருது வீராணம் வருது

நம்மூர்ல பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யணும்ன்னு எளுதிக்கீது போல. வங்கக்கடல்ல பொயல்சின்னம் வந்து அஞ்சு நாளு மள பொலந்து கட்டுனதுல இப்போ அல்லாரும் கொஞ்சம் குஜாலாக்கீறாங்கோ.

மளப் பெஞ்சதுல அம்மாவும் குஷி ஆயிட்டாங்க போல, "வீராணத்துல தண்ணி ஃபுல்லாக்கீது, இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைல குடிக்கத் தண்ணி இல்லேன்னு ஒர்த்தரும் கொரலு வுடாத ரேஞ்சில கொண்டாறேன்"னு சொல்லிக்கீறாங்கோ. வீராணத்துலேந்து தண்ணிக் கொண்டாரது, அத்துக்கு ஒலக பேங்கு துட்டு குட்க்கிறது அல்லாம் சர் தான் தாயி. கேக்க ஜந்தோஷமா தான் கீது.

ஆனா ஒரு மேட்டர மன்ஸுல வெச்சிக்கோங்கபா. பக்கத்து இஸ்டேட்டுப் பார்ட்டிங்கோ தண்ணி தருவாங்கோங்கிற நம்பிக்க இப்போ அல்லாருக்கும் பூட்ச்சு. ஓடுற ஆத்தை எல்லாம் தேசியமயமாக்குறதும் எலிக்ஸன் ஸ்டண்டு மேரி ஆயி பூட்ச்சு. பொயல்சின்னம் வந்தா தான் மள பெய்யும் ஆயிட்ட நெலமைல பெய்யிற மளய கொஞ்சம் மண்ணுக்குள்ள சேர்த்து வெக்க ஆர்ன்னா முயற்சிப் பண்ணிங்கன்னா நல்லா இர்ப்பிங்கோ.

வூரு ஒலத்துல கீற ஏரி கொளமெல்லாம் தூரு வாராம அடஞ்சி கெடக்குது. அத்த அப்பப்போ தூரு வாறிக்கின்னு இர்ந்தா இப்டி அடிக்கிற மள கொஞ்சமாவது அதுல போய் நிக்கும், அல்லாங்காட்டி அவ்ளோ தண்ணியும் வீணால்ல போவும். அந்தக் காலத்துல ராசாவெல்லாம் கொளம், ஏரின்னு வெட்டி அத்து தூரடஞ்சு பூட்ச்சின்னா தூரு வாரிக்கின்னு இர்ந்தாங்கோ. நீங்கல்லாம் புச்சா ஏரி கொளம் வெட்ட வாணாம். இருக்கிறத பத்திரமா பாத்துக்கின்னு அத்துல எதுனா தண்ணிய புட்ச்சி வெக்க முடியுமான்னு பாருங்கபா. மக்களுக்கு மதமாற்றத் தடைச் சட்டத்தல்லாம் விட குடிக்கிற தண்ணி ரொம்ப முக்கியம்.

Wednesday, May 05, 2004

புது மாப்ள சாசர்

நமம் கம்பியூட்டருக்கு புச்சா ஒரு வைரஸு வந்துக்கீதாம். ஆளு படா ஷோக்கு பார்ட்டியாம். இந்தச் சாசர ஆரும் உள்ள புட்ச்சாந்து வுட வாணாமாம், தானே உள்ள பூந்து ஜில்லாத்தாங்கு ஆட்டம் போடுவாராம்.

இந்தச் சாசரு வந்த கம்பியூட்டருல பெரிய பெரிய பார்ட்டிங்க அல்லாம் அடி வாங்கிருக்காங்க போல.

சாசரப் பத்தி தெர்ஞ்சிக்கணும்ன்னா இங்கே போங்க "சாசர் வாங்கலையோ சாசர்"

Sunday, May 02, 2004

நூறு வர்ஸம் இந்த மாப்ளேயும் பொண்ணும்

மர்த்தடில குந்திகின்னு கொரலு எதிர்கொரலுன்னு வுட்டு கலக்கிக்கின்னு இர்ந்த பெரச்சனைக்கு இன்னிக்கு டும்டும்டும். இனி பார்ட்டியால காலத்துக்கும் கொரலே வுட முடியாதுன்னு தோணுது.

மச்சி பெரச்சனை இன்னேரம் கண்ணாலம் முடிஞ்சு நெக்ஸ்ட் மேட்டரு இன்னான்னு நகத்த கட்ச்சிக்கின்னு குந்தியிர்க்கும். கண்ணாலம் கட்ன மச்சியும் தங்காச்சியும் நூறு வர்ஸம் குஷியா குஜாலா இர்க்கணும்ன்னு குப்ஸாமி கடவுளாண்ட வேண்டிக்கிறான்பா.

Saturday, May 01, 2004

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே

செங்கல்பட்டுல லாரிக்காரன் கொண்டாட்டம், இங்கே சென்னையிலே தண்ணியில்லாம திண்டாட்டம்

நேத்து ஆர்ல்லாம் சண்டிவி நூஸ் பாத்திங்கபா. நேத்திய நூஸ்ல ஒரு மறக்க முடியாத மேட்டர காட்னாங்கோ. வர்ற அஞ்சாந்தேதி டெல்லி பெர்ய தாத்தா ஓட்டுக் கேக்க வர்றாரு. தாத்தா வர்ற நேரத்துல வீராணத்துலேந்து சென்னப்பட்டணத்துக்கு தண்ணி கொண்டாந்துட்டோம்ன்னு காட்ட வேண்டி அம்மா ஒரு ஜூப்புரு ஐடியா பண்ணிக்கீறாங்கோ.

செங்கல்பட்டாண்ட லாரி லாரி கொளாய்ல தண்ணி வூத்தி அத்த அஞ்சாந்தேதி தாத்தா வர்ற நேரத்துல ஓப்பனிங் வுடப்போறாங்களாம். அஞ்சாந்தேதி வரைக்கும் அந்தக் கொளாய்ல எவ்ளோ தண்ணி வூத்துவாங்கோன்னு அம்மாவுக்கும் கார்ப்பரேஸனுக்கும் தான் வெளிச்சம்.

லாரிலேந்து தண்ணி கொளாய்ல வூத்த சொல்ல நமக்கு வயிறு எரியுதுபா. கொளாய்ல பாதி தண்ணி வெளில பாதி தண்ணின்னு ஓடுது. நூஸ்ல காட்டுறப்போவே ஒரு அம்பது லாரி நிண்ணுருக்கும். அப்பாலிக்கா எத்தன லாரியோ.

அவனவன் சென்னப்பட்டணத்துல களுவத் தண்ணியில்லாம கஸ்டப்படுறான். அம்மா இன்னான்னா தாத்தாகிட்டே சீன் காட்றதுக்கு கொளாய்ல லாரி தண்ணி வுடுறாங்கோ. கொளந்தைக்கு சோறு வூட்னதா காட்றதுக்கு அம்மாக்காரி வர்ற நேரத்திலே வேலக்காரி கொளந்த வாயில சோத்துப்பருக்கய தடவி வுட்டாளாம். அந்தக் கதயா தான் கீது நம்ம அம்மா செய்ற மேட்டரும்.

Wednesday, April 28, 2004

ராசா ராசா ராசா பாரதிராசா

பேச ஆரம்பிச்சாலே "என் இனிய தமிழ்மக்களே"ன்னு கொரலு வுடுற பாரதிராசா திடீர்ன்னு "நான் கள்ளச்சாதிப் பய"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. பத்து நாளைக்கு முன்னே பாரதிராசாவுக்கும், தமிளுக்குச் சோறுபோடுற வைரமுத்துவுக்கும் மருதையில நடந்த பாராட்டு விளாவுல தான் இந்தச் சவுண்டு.

மொதல்ல பேச வந்த பயாஸ்கோப்புக்கு கத எளுதுற ரத்னகொமாரு "இந்தப் பெர்ய மன்ஸங்கோ இம்மா பெர்ய லெவல்லக்கீறாங்கன்னா அதுக்கு நம்ம கள்ளருங்க தான்பா மெயின் ரீசனு"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு. தமிளுக்கே சோறு போடுற மீசக்கார வைரமுத்து இதுல எதோ மேட்டர்கீதுபா நம்ம நைசா மாட்டாம எஸ்கேப் ஆவணும்ன்னு "இது சாதிக்காரங்க வெளா இல்லபா, இனவிளா"ன்னு அஜீஸ் பண்ணிட்டாரு.

அப்பாலிக்கா பேசவந்த பாரதிராசா கரீட்ட "பல்லி கயினித்தொட்டில குதிக்கிற" மேரி குதிச்சிட்டாரு. "நா கள்ளச்சாதி தான்பா, எனக்கு சாதிப்பயங்கோ தான்பா வோணும்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

கொரலு வுட்ட அண்ணாத்தே சினிமால மட்டும் தான் சாதி வாணாம் மதம் வாணாம்ன்னு க்ளாஸ் எடுக்கிறாப்ல மொதல் மருவாதியும், அலைகள் ஓய்வதில்லேயும், வேதம் புச்சுன்னும் எடுப்பாராம், ஆனா மன்ஸுக்குள்ள சாதி என்னிக்கும் சேர் போட்டு குந்திக்கின்னு கீதாம். சோக்கா கீதுபா நாயம். இவுரு சாதிக்காரங்கோன்னு சொல்றவங்கோ மட்டும் தான் இவரு படத்த பாத்தாங்களா, இவரு சாதியால தான் இவருக்கு அவார்டுல்லாம் குட்த்தாங்களா. எந்தூரு நாயம்னே தெர்லபா.

இந்த மேட்டர பட்ச்சப்போ இதுக்கு இன்னா ரீசனு இருக்கும்ன்னு குப்ஸாமி குந்திகின்னு ரோசனப் பண்ணான். இந்த மன்ஸன் நெய்வேலில வந்து அம்மாவுக்கு சோப்பு போடறதுக்காக சவுண்டு வுட்ட பார்ட்டி, இப்போ புச்சா "நா கள்ளச்சாதிடா"ன்னு சவுண்டு வுட்றாருன்னா ரீசனில்லாமலா இர்க்கும். கீதுபா கீது.

இன்னும் ரெண்டு வர்சத்துல இஸ்டேட்டு எலிக்ஸன் வர்து. நம்ம லெவலுக்கு பார்லிமெண்டுல்லாம் வேலிக்காவாதுன்னு பாரதிராசாவுக்கு தெர்யும். அத்தோட அம்மா வேற எல்லாரையும் புச்சு புச்சா புட்ச்சு எலிக்ஸன்ல நிக்க வெக்கிறாங்கோ. பாத்தாரு நம்ம பாரதிராசா, இப்போவே நம்ம பின்னால ஒரு சாதிக்கார கூட்டமே பிகிலடிக்க ரெடியாக்கீதுன்னு அம்மா காதுல போட்டு வெச்சா இஸ்டேட்டு எலிக்ஸன்ல அம்மா நம்மள கண்டுக்குவாங்கோன்னு ஒரு நெனப்புல ஓவரா சவுண்டு வுட்டுக்கீறாரு.

நயினா பாரதிராசா, நீயி நெய்வேலில "அம்மா தன்னோட சொந்த செலவுல எங்களுக்கு பஸ்ஸு குட்த்தாங்கோ, வழி செலவுக்கு பிஸ்கோத்து குட்த்தாங்கோ"ன்னு போட்டுவுட்டப்போவே அம்மா உன்னிய நம்பி ஒண்ணும் செய்யக்கூடாதுன்னு டிசைடு பண்ணிட்டாங்கோ. இப்போ நீ இன்னா சவுண்டு வுட்டாலும் சீட்டும் கெடிக்காது, ஒண்ணும் கெடிக்காது. நல்லதா நாலு படத்த குட்த்தோமா, புள்ளிய நடிகனாக்காம எதுனா ஒரு கடையகன்னிய வச்சி பாத்துக்கச் சொன்னோமான்னு இர்பா, அத்தான் உனுக்கும் நல்லது, தமிள்நாட்டுக்கும் நல்லது.

Tuesday, April 27, 2004

அ.இ.ல.தி.மு.க கச்சி தலீவர் தாடிக்காரராண்ட குப்ஸாமி பேட்டி

திங்கக்கெளம புச்சா கச்சி ஆரம்பிச்ச தாடிக்கார அண்ணாத்தே டி.ராஜேந்தராண்ட குப்ஸாமி பேட்டி எடுக்கப்போறான்பா.

குப்ஸ்: சலாம் போட்டுக்கிறேன் வாத்யாரே

டிஆர்: வாய்யா என் குப்பு
இனி என் ரேஞ்சு அப்பு
என்கிட்டே வேகாது பப்பு

குப்ஸ்: தலீவா இன்னும் எத்தினி காலத்துக்கு தான் இத்த மேரி கொரலு வுட்டுக்கின்னு இர்ப்ப. எதுனா புச்சா பேசுபா.

டிஆர்: (படா ஃபீலிங்ஸோட) என் அம்மா, தாய், என்னைப் பெத்த கடவுள் என்ன பெத்துப்போட்டப்போவே கூட பொறந்ததைய்யா இந்தப் பேச்சு, இது எனக்கு உயிர் மூச்சு.

குப்ஸ்: தோடா, இந்த டகுலு தானே நம்ம கைல வாணாங்கிறது. எம்சியாருக்கு எதிரா நம்ம தாத்தா ஒன்னிய கொம்பு சீவி வுட்டப்போ தாத்தாவ கரீட் பண்ண வேண்டி சொம்மா அடுக்கடுக்கா டயலாக்கு வுட்ட, இப்போ இன்னான்னா அத்த கூட பொறந்ததுன்னு என்னாண்ட போட்டுக்காட்றியே தலீவா, இத்து நாயமா..

டிஆர்: என் அன்பு தம்பி குப்புசாமி, நான் உங்களின் தோழன். ஏழைகளின் நண்பன். உழைப்பாளிகளின் உன்னத நண்பன்.

குப்ஸ்: செரி செரி, ஒடனே ஃபீலிங்ஸ் ஆவாதபா. பயாஸ்கோப்புல ஒண்ணோட ஃபீலிங்ஸ் பாத்து பிகிலடிச்சாங்கோன்னு எப்போ பாத்தாலும் அத்த எட்த்து வுடாதே. நான் இப்போ புச்சா ஆரம்பிச்ச கச்சிய பத்தி பேச வந்துக்கீறேன்

டிஆர்: நான் ஆரம்பிச்சிருக்கேன் புது கச்சி
இனி மத்ததெல்லாம் எனக்கு எச்சி
நீ கேள்விய கேளு மச்சி

குப்ஸ்: ஒன்னிய கரீட் பண்ணவே முடியாதுபா. கச்சி ஆரம்பிக்கசொல்ல ஒன்னோட ரசிகர் மன்ற நிர்வாகிங்க கூட பேசி இந்த முடிவ எட்த்துக்கீறே'ன்னு டயலாக்கு வுட்டியே ஆர்பா அந்த நிர்வாகிங்கோ?

டிஆர்: என் மனைவி உஷா அகில உலக டிஆர் ரசிகர் மன்ற தலைவர். எனது மூத்த மகன் சிலம்பரன் அகில உலக டிஆர் ரசிகர் மன்ற பொறுப்பாளர். எனது அன்பு மகள் இலக்கியா அகில உலக பொருளாளர். என் இளைய மகன் குறளரசன் அகில உலக செயலாளராகவும் இருக்கிறார்கள். இவங்க எல்லோருடனும் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்.

குப்ஸ்: ஆகா ரசிகருங்கோ ஒரு குடும்பமா இர்க்கணும்ன்னு சொல்லுவாங்கோ, இங்கே குடும்பமே ரசிகர் மன்றமா கீது. நயினா நீ கில்லாடிபா. செரி, ஒன்னோட பெரிய புள்ள இன்னான்னா குத்து படத்துல "அஞ்சு வெரல் காட்டுனா"ன்னு கூவிக்கின்னே க்ளோஸப்புல வெரல் காட்டுது, நீ இன்னான்னா தாத்தாவ எதுத்துக்கின்னு புச்சா கச்சி ஆரம்பிச்சிக்கீற. அப்போ பெர்ய புள்ள ஒங்கூட கொரலு வுடாதா?

டிஆர்: (திரும்பவும் படா படா ஃபீலிங்ஸுடன்) அவன் அம்மா வயித்துல இருக்கும்போதே அவனுக்காக படத்துக்கு கத எழுதினேன். அவன் தொட்டில்ல தவழுறப்போவே அவன் கதாநாயகனா 20 வயசுல நடிக்க கதை எழுதினேன். இப்படி எல்லாம் பாலூட்டி சீராட்டி வளத்த புள்ள இப்போ என் படத்துல நடிக்க கால்ஷீட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.

குப்ஸ்: செரி வுடு தலீவா, எந்த வூட்டுல புள்ளிங்கோ அப்பன் பேச்சக் கேக்குதுங்கோ. கச்சில ஆர்ல்லாம் கீறாங்கோ, ஆராருக்கு இன்னா போஸ்ட்டிங்?

டிஆர்: கடந்த முறை கட்சி ஆரம்பித்தபோது அரசியல் அனுபவம் இல்லாத என் மனைவி மக்களை முக்கிய உறுப்பினர்களாக போட்டதால் என் கட்சி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதனால் இம்முறை அந்தத் தவறை செய்வதாக இல்லை.

குப்ஸ்: இன்னா தலீவா இப்டி சொல்லிட்ட. உனுக்கு அவங்கள வுட்டா கச்சில ஆர்பா ஆளுக்கீறா?

டிஆர்: இந்த டி.ராஜேந்தர் மாயவரத்திலிருந்து ரயில் ஏறி பாடிக்கொண்டே சென்னை வந்தது தனியாக தான். அவன் படங்களில் வெற்றிக்கொடி நாட்டியதும் தனியாக தான். அதனால, கட்சித்தலைவர், செயலாளர், பொருளாளர், கொ.ப.செ, கட்சி பேச்சாளர், நிர்வாகக்குழு தலைவர், கட்சி உறுப்பினர், போஸ்டர் ஒட்டுபவர் என்ற எட்டு காரியங்களையும் நானே எடுத்துச் செய்யப்போகிறேன். இந்தக் கட்சிக்கு ராஜேந்தர் ஒருவனே போதும், தனியாக நின்று ஜெயிப்பேன். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் தலைவி ஜெயலலிதா என்னை கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவருக்கு எனது ஆதரவு உண்டு.

குப்ஸ்: நைனா நீயி மெய்யாலுமே பெர்ய ஆளுபா. ரிக்ஸாவுக்கு சவாரி ஒண்ணு வெயிட்டிங்ல கீது, நா கலண்டுகிறேன்.

Monday, April 26, 2004

ஓட்டு கேக்குறாங்கப்பா

கட்சிக்காரங்களுக்கு எப்டில்லாம் ஓட்டுக் கேக்றதுன்னு ஒரு ரேஞ்சே இல்லாம பூட்ச்சுபா.

நம்ம தெலுங்கு தேச நாயுடுகாரு இண்டெர்நெட்டு, ஈமெயிலுன்னு ஓட்டுக் கேக்க ஆரம்பிச்சிட்டாரு. நாயுடுகாரு ஓட்டுக் கேக்கப் போற எடத்துலல்லாம் தெலுங்குதேசத்துக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்றாரோ இல்லியோ "மறக்காம ஈமெயிலு ஒண்ணு வெச்சிக்கோங்கோ"ன்னு சொல்றாராம். இன்னா கொடுமைன்னா அவரோட தொகுதிலக்கீற மக்கள்ஸ்க்கு ஈமெயிலு, கொசுமெயிலுல்லாம் ஒண்ணுமே தெர்யாது. நாயுடுகாருவுக்கு ஐத்ராபாத்து தான் ஆந்திரான்னு நெனப்பு.

நாயுடுகாரு ஈமெயிலு, இண்டர்நெட்டுன்னு போன நம்ம காவிக்கட்சி சொம்மா குந்திக்கின்னு இர்க்குமா. நைனா நீ இஸ்டேட்டு, நானு ஒட்டுமொத்த இந்தியாவையே கைல வெச்சிக்கீறேன், இன்னா செய்றேன் பாருன்னு கெளம்பிட்டாங்க. வூர்ல கொஞ்சநஞ்ச எடம் கெடைச்சாலும் தாமரப்பூவ வரஞ்சி வுட்டுடுறாங்களாம்.

தாமரப்பூவ எதுனா செவுத்துல வரஞ்சிவுட்டா பரவால்ல, ஆர்வக்கோளாறுல பேங்கு பணக்கட்டுல ஒட்டிக்கீற பேங்கு பேப்பருல கூட தாமரப்பூவ அடிச்சி வுட்டுட்டாங்களாம். இத்த விட பெரிய கூத்து இன்னான்னா கேரளாவிலே வூர்லக்கீற வழிகாட்டி கல்லுல்லாம் தாமரப்பூவ வரஞ்சி தள்ளிட்டாங்கோ. கேரளாவிலே இனி ஒரு பயலும் புச்சா ஒரு வூருக்குப் போனா அது இன்னா வூரு, அங்கேர்ந்து அடுத்த வூருக்கு எத்தினி கிலோமீட்டருன்னுல்லாம் தெர்ஞ்சிக்கக்கூடாது.

"அரசாங்க சொத்து நம்ம சொத்து"ன்னு சொல்றதை கரீட்டா புர்ஞ்சிக்கின்னது காவிக்கட்சி தான்பா.

நாளைக்கே நம்ம வெங்காய நாயுடு "தாமரப்பூவ நாங்க பேங்கு பணக்கட்டுல அடிச்சதுக்கும், கேரளாவிலே வழிகாட்டி கல்லுல வரஞ்சி வெச்சதுக்கும் காரணம் எங்க கட்சி சின்னங்கிறதால கெடியாதுபா. தாமரப்பூ நம்ம தேசியப்பூ, அத்த ஆரும் மறந்துடக்கூடாதுன்னு ஃபீலாயி தான் அப்டி செஞ்சோம்"ன்னு டகிலு வுட்டாலும் வுடுவாரு.

Saturday, April 24, 2004

எலக்கியம் படிக்கலாம் வாங்க

ரிக்ஸா வளிக்கிற குப்ஸாமிக்கு எலக்கியம் படிக்க ஆச வந்துடுச்சுபா. முன்னே ஒருக்கா இப்டி ஆர்வத்துல நம்ம பேட்ட தமிளுல வெண்பால்லாம் எய்திக்கீறேன். குப்ஸாமிக்கு வெண்பான்னா புட்ச்சிப் போனது இன்னா மேட்டருன்னா பாத்தா ரெண்டு பார்ட்டிங்கள மெயினா சொல்லணும்பா. மொதோ ஆளு கவிதன்னா என்க்கு கலீஜுன்னு டகிலு வுடுற பாரா. அவரு தான் "தெரிஞ்சது மட்டும்"ன்னு குமுதத்துல எய்தினப்போ சுலுவான வெண்பால்லாம் வாராவாரம் எய்துவாரு. "அட வெண்பா ஒரு குண்சாத்தான் கீதுபா"ன்னு நெனைக்க வெச்சவரு அவரு தான்.

அடுத்தது நம்ம குருஜி அரியண்ணாத்தே. அண்ணாத்தே பத்தி கோபக்கார வாத்யாரு, அத்து இத்துன்னால்லாம் சொல்றவங்கோ கீறாங்கோ. மெய்யாலுமே அப்டில்லாம் இல்லபா. சின்னச் சின்ன மிஸ்டேக்குல்லாம் பண்ணிட்டு "அண்ணாத்தே இது கரீட்டா ராங்கா"ன்னு கேட்டா, மன்ஸன் இன்னா பிஸியா இர்ந்தாலும் செரி "அப்டி வரக்கூடாது கண்ணா, இத்தான் கரீட்டு"ன்னு சொல்லி, அதுக்கு ரெண்டு மூணு சாம்பிளும் எட்த்து வுடுவாரு. இன்னிய தேதில நெறியா சின்னப்பசங்களுக்கு வெண்பா எளுதணும், மரபுன்னா இன்னான்னு கத்துக்கணும்ன்னு ஒரு ரேஞ்சிலே சுத்திக்கின்னுக்கீறாங்கன்னா அதுக்கு அண்ணாத்தே ஒரு மெயின் பார்ட்டி.

செரி குப்ஸாமி, அத்தான் அல்லாருக்கும் தெர்ஞ்ச மேட்டராச்சே இப்போ இன்னா சொல்ல வரேன்னு கேக்றிங்களா. நம்ம அரியண்ணாத்தே மதுரபாரதியாரோட சேந்து ஒரு குளு ஆரம்பிச்சிக்கீறாரு. பேரு "மரபெலக்கியம்".

"கவித எய்தணும்ன்னா இந்த மேரி மரபெல்லாம் கத்துக்கணும், எனக்கு இன்னாத்துக்கு"ன்னு கேக்காதிங்கோபா. எதுனா ஒரு மேட்டர ஆர்ன்னா கத்துக்குட்க்க ரெடியாக்கீறாங்கோன்னா அத்த கத்துக்கிறது நல்லது. இல்லாங்காட்டி கத்துக்குட்க்க ஆளு இல்லாத நேரத்துல ஃபீலாவணும்.

கத்துக்குட்க்கிற எடத்துல உள்ள பூந்து சவுண்டு வுடணும்ன்னு இல்ல, கத்துக்கின்ன அடுத்த நாளே மரபுக்கவித எய்தணும்ன்னு இல்ல. ஒரு ஓரமா குந்திக்கின்னு இன்னா தான்பா நடக்குது இங்கேன்னு வேடிக்கப் பாக்கலாம். இன்னிக்கு இல்லாங்காட்டி என்னிக்காவது ஒரு நாளு "அட இத்தெல்லாம் பட்ச்சது நல்லதா பூட்ச்சுபா"ன்னு சொல்லுவோம்.

"மரபெலக்கியம்" பக்கமா ஒரு சவாரி வுட்டப்போ ஒரு மேட்டரு மன்ஸுல பட்டுச்சு. குளு கலரெல்லாம் "சேப்பு கலரு ஜிங்குச்சா, மஞ்சா கலரு ஜிங்குச்சா"ன்னு கண்ணுல அடிக்கிற கலரா போட்டுக்கிறாங்கோ, அத்த கொஞ்சம் சரி பண்ணா ஜூப்பரா இர்க்கும்.

Wednesday, April 21, 2004

ஊனம் எல்லாம் ஊனமில்லிங்கோ

இன்னிக்கு குப்ஸாமி மன்ஸு ரொம்ப ஃபீலாகி எய்துறான்பா. நேத்திக்கு நம்ம பகுத்தறிவு பகலவரோட பயாஸ்கோப்பு பொட்டில நூஸ் காட்னாங்கோ. கடேசியா "வேடிக்கை வேட்பாளர்கள்'ன்னு ஒண்ணு காட்னோங்க.

மொதோ ஒருத்தரு காட்னாங்கோ, அவரு எதோ ஆர்வக்கோளாறுல எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. கூட நிண்ணு கையெளுத்து போட பத்து பேரு கூட இல்லாத ஆளு. இவர வேடிக்கை வேட்பாளர்ன்னு சொன்னாங்கோ, இத்த லூஸ்ல வுடலாம்.

அடுத்ததா ஒராளு கின்னஸ்ல பேரெடுக்கணும்ன்னே எலிக்ஸன்ல நிக்கிற பார்ட்டி. பொண்டாட்டி தாலிய கூட அடவு வெச்சி எலிக்ஸன்ல நிக்கிறாரு. இவரல்லாம் பாத்த அய்வுலாமா சிரிக்கலாமான்னு கூட தெர்ல. இவர வேடிக்க வேட்பாளருன்னு காட்னாங்கோ, இத்தையும் லூஸ்ல வுடலாம்.

ஆனா, கட்ஸியா காட்னது தான்பா மன்ஸுக்கு ஃபீலிங்கா கீது. ரெண்டு காலும் ஊனமான மன்ஸன் எலிக்ஸன்ல நிக்கக்கூடாதுன்னு எதுனா சட்டம் கீதா. ஒரு எள வயசு, நல்லா பட்ச மன்ஸன் (சட்டம் படிக்கிறாரு) ஆனா ரெண்டு காலும் ஊனமானவரு எலிக்ஸன்ல நிக்க ஆசப்பட்டு பதிவு பண்ணிக்கீறாரு.

எலிக்ஸன்ல ஜெயிச்சா "ஊனமுற்றவங்களுக்கு வேலைவாய்ப்பை பெறுக்குவேன்"ன்னு சொல்லிக்கீறாரு. நெறியா ஊனமுற்றவங்கோ அவருக்கு பாராட்டுல்லாம் சொல்றாங்கோ. ஆனா அவரு சுயேச்சையா நிக்கிற காரணத்தால அவரையும் "வேடிக்க வேட்பாளரு"ன்னு கட்டம் கட்றாங்கோ நூஸ் பார்ட்டிங்கோ.

ரெண்டு காலும் இல்லாங்காட்டி பாராளுமன்றதுக்கு போவ முடியாதா? மக்களுக்கு நல்லது செய்ய முடியாதா? நீயி அவரோட மன்ஸ பாராட்ட வாணாம், தட்டி கீள எறக்காமலாவது இர்க்கலாம்ல. ரஜினி கொரலு வுட்டா பக்கம் பக்கமா எய்துற நம்ம மக்களுங்கோ இத்தல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்கபா. மன்ஸுல கொறை கீறவங்கோல்லாம் எலிக்ஸன்ல நிக்கிறப்போ ஒடம்புல கொறக்கீற அந்த மன்ஸன் நிண்ணா தப்பில்லேன்னு நூஸ் பார்ட்டிங்களுக்கு ஆர்னா சொல்லுங்கபா.

Monday, April 19, 2004

தீரனைய்யா இது கரீட்டா???

எலிக்ஸன் நெருக்கத்துல வர்றப்போ நம்ம விகடன் பார்ட்டிங்கோ எலிக்ஸன் ஜோக்குல்லாம் எட்த்து வுடுறாங்களோ இல்லியோ அரசியல்வாதிங்கோ சொம்மா சோக்காவே ஜோக்கு எட்த்து வுடுறாங்கபா.

மொதோ ஜோக்கு நம்ம காவி வேட்டி பார்ட்டி ராசா (பொது செயலாளராம்ல்ல) "ரஜினி அறிக்கையால் மக்கள் மனதில் மாற்றம் வந்திருக்கிறது"ன்னு சொல்லிக்கீறாரு. நானும் அத்தான்பா சொல்றேன். சூப்புரு கொரலு வுட்டதும் "அட போப்பா, இனிமே நீ கொரலே வுட வாணாம். அல்லாம் எங்களுக்கு தெர்யும். நீ வுண்டு ஒண்ணோட எமயமல வுண்டுன்னு போயி குந்திக்கோ"ன்னு தான் மக்கள்ஸ் மன்ஸுல வுண்டாய்க்கீது. அத்தான ராசா நீங்க சொல்ல வர்றது?

நேத்திக்கி நட்ந்த இன்னொரு ஜோக்கு சொல்றேம்பா. மரவெட்டி கட்சில சீட்டு குட்க்கலைன்னு கோச்சிக்கின்னு போயி காவி வேட்டி கட்டிக்கின்னாரே தீரரு, நாபகம் கீதா. அவுருக்கு காவி பார்ட்டிங்களும் சீட்டு குட்க்கல, அத்து வேற மேட்டரு. அந்தத் தீரரு நேத்து காவிக்காரங்கோ கட்டடத்துல குந்திக்கின்னு "நா பெரிய மரவெட்டியோட ஊளலைல்லாம் வெளில கொணாரப் போறேன்"ன்னு கொரலு வுட்டுக்கீறாரு.

நைனா, நா ஒண்ணு கேட்டா கோச்சுக்கக்கூடாதுபா. நீ எத்தினி காலமா அந்த மரவெட்டி கூட குந்திக்கின்னு ஒரே தட்டுல சோறு துண்ணு ஒரே குவாட்டர கட்டிங் வுட்டுக்கின்னு இர்ந்த. அப்போல்லாம் மரவெட்டி செய்த ஊளலு கண்ணுக்கு தெர்யலையா? அவரு புள்ளிங்கோ, கொயிந்த, குட்டிக்குல்லாம் சொத்து சேத்தாருன்னு கண்ணுக்கு தெர்யலையா? வூருல வெட்டுன மரத்துக்கெல்லாம் சேத்து வச்சி தைலாபொரத்துல மரமா வளத்து ஒரு பண்ண வச்சிக்கீறாரே, அத்தெல்லாம் மூணு நாலு வர்சமா சொம்மா குந்திக்கின்னு பாத்துக்கின்னு தான இர்ந்த.

கச்சில சீட்டு குட்க்கலைன்னதும் சொம்மா ஃபீலிங்ஸு பிச்சிக்கிச்சு போல. இப்போ வந்து "நா ஒண்ணோட ஊளலைல்லாம் வெளில கொணாரேம் பாரு"ன்னு ஃபிலிமு காட்றியே இத்து நாயமா நைனா. மன்ஸனா இர்ந்திருந்தா கச்சில குந்திக்கின்னு இர்ந்தப்போவே சொல்லிருக்கணும்பா, இப்போ வந்து கொரலு வுடாதே.

Saturday, April 17, 2004

குப்ஸாமி அய்வுறாம்பா



இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலுன்றாங்கோ, மன்ஸனோட உசிரு என்னிக்கு போவும் எப்போ போவும்ன்னு ஆருக்கும் தெர்யாதுன்னு சொல்றாங்கோ. மெய்யாலுமே அப்டி தான் போல. இன்னிக்கு காலேல வர்ற குப்ஸாமியோட கனவுல வந்து குண்ஸா ஒரு கோண ஒதட்டு சிரிப்பு சிரிச்ச அம்மிணி இப்போ உசுரோட இல்ல.

டொப்புன்னு கெலிகாப்டரு தீப்புட்ச்சிக்கின்னு டப்புன்னு மேல போயி சேந்துட்டாங்கோ. மேல பறந்துகின்னு கீறப்போவே மேல போயி சேந்துட்டாங்கோ. இந்த "மேல போறது"க்கு மட்டுந்தாம்பா விசா வாணாம், டிக்கெட்டு வாணாம், ஆரும் பாதி வளில எறக்கி வுட மாட்டாங்கோ, நேரா போயி சேர வேண்டிய எடம் தான் மேட்டரு.

"அப்டி பாக்றதெல்லாம் வாணாம்"ன்னு கனவுல வந்து பாடிக்கின்னு இர்ந்தவங்கோ உசுரோட இல்லைன்னு நென்ச்சிக்கூட பாக்க முடியலபா. குப்ஸாமி செம்ம ஃபீலிங்ஸ்ல கீறான். மெய்யாலுமே அய்க வருதுபா. அப்பாலிக்கா பாக்கலாம்.....